ஒட்டன்சத்திரம்: கள்ளக்காதலனுடன் இளம்பெண் ஓட்டம் பிடித்ததை தொடர்ந்து, அப்பெண்ணின் 2 குழந்தைகளையும் கொன்று பாட்டி, அவரது தாய் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே சின்னகுழிப்பட்டியை சேர்ந்தவர் செல்லம்மாள் (70). மகள் காளீஸ்வரி (50). இவரது கணவர் ஆறுமுகம். இவர்களது இளையமகள் பவித்ராவை (28) கரூர் மாவட்டம், பள்ளபட்டி அருகே சவுந்தபுரத்தை சேர்ந்த பிரபாகரனுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இந்தத் தம்பதிக்கு 7, 5 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். பிரபாகரன் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் வாகன விபத்தில் காளீஸ்வரியின் கணவர் ஆறுமுகம் இறந்தார். அப்போது கிடைத்த இன்சூரன்ஸ் பணம் மூலம் சின்னகுழிப்பட்டியில் உள்ள தனது வீட்டை காளீஸ்வரி இடித்து கட்டியுள்ளார். அப்போது பவித்ரா வசித்து வரும் ஊரான பள்ளபட்டியை சேர்ந்த ஒருவர் பெயின்டிங் வேலைக்கு வந்துள்ளார். அவருக்கும், பவித்ராவுக்கும் தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பவித்ரா அடிக்கடி தாய் வீட்டுக்கு வந்து போய் உள்ளார்.
பவித்ராவின் நடவடிக்கையில் சந்தேகப்பட்ட பிரபாகரன், அவரை கண்டித்துள்ளார். இந்நிலையில் ஒரு மாதத்துக்கு முன் பவித்ரா கணவருடன் கோபித்துக் கொண்டு, தனது இரு மகள்களுடன் தாய் வீட்டிற்கு வந்து தங்கிவிட்டார். மீண்டும் பெயின்டருடன் தகாத உறவை தொடர்ந்துள்ளார். இருவரும் நேற்று முன்தினம் மாலை வீட்டை விட்டு ஓடிப் போனதாக கூறப்படுகிறது. இதையறிந்து பவித்ராவின் பாட்டி செல்லம்மாள், தாய் காளீஸ்வரி இருவரும் மனவேதனை அடைந்துள்ளனர். இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு செல்லம்மாள், காளீஸ்வரி இருவரும், பவித்ராவின் இரு பெண் குழந்ைதகளையும் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்தனர். பின்னர் அவர்களும் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து இடையகோட்டை போலீசார் வழக்குப்பதிந்து பவித்ராவையும், அவரது கள்ளக்காதலனையும் தேடி வருகின்றனர். இளம்பெண்ணின் கள்ளக்காதல் 4 பேரை காவு வாங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
The post கள்ளக்காதலனுடன் இளையமகள் ஓடியதால் அதிர்ச்சி 2 பெண் குழந்தைகளைக் கொன்று தாய், மகள் தூக்கிட்டு தற்கொலை: திண்டுக்கல் அருகே சோகம் appeared first on Dinakaran.