கன்னியாகுமரி: பாஜ பிரமுகர் முத்தம் கொடுத்ததால் ஏற்பட்ட தகராறில் மனைவியை இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்டார். குமரி மாவட்டம் அருமனை அருகே பத்துகாணி குமாரபவன் பகுதியை சேர்ந்தவர் அனில்குமார் என்ற அனிகுட்டன் (48). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி தன்னியா (40). இந்த தம்பதிக்கு ஒரு மகன் உண்டு. தன்னியா பத்துகாணி சந்திப்பு பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். அங்குள்ள நிஜாபவன் பகுதியை சேர்ந்த பாஜ கிளை செயலாளர் மதுகுமார் (52), தன்னியாவுக்கு முத்தம் கொடுத்ததை அனிகுட்டன் பார்த்துள்ளார். அன்று முதல் அனிகுட்டன்- தன்னியா தம்பதி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த மதுகுமார் ஆத்திரம் அடைந்து அனிகுட்டனை வாளால் வெட்ட முயன்றதும், தன்னியா கணவரை கம்பால் அடித்த சம்பவங்களும் அடுத்தடுத்து நடந்தன. இதுகுறித்து அனிகுட்டன் ஆறுகாணி காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் மதுகுமார் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். இந்நிலையில் கைதான மதுகுமார் ஜாமீனில் வந்தார். தன்னியாவும் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இதனை தொடர்ந்து மதுகுமாருக்கும், தன்னியாவுக்கும் இடையே மீண்டும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இதனை அறிந்த அனிகுட்டன் மனைவியை கண்டித்து உள்ளார். ஆனால், தன்னியா கணவர் பேச்சை கேட்கவில்லை. இதனால் மனைவி மீது ஆத்திரத்தில் இருந்த அனிகுட்டன் அவரை தீர்த்துகட்ட முடிவு செய்தார். அதன்படி நேற்று காலை மளிகை கடையை திறக்க சென்ற தன்னியாவை பின்தொடர்ந்து அனிகுட்டன் இரும்பு கம்பியுடன் சென்றார். கடையில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அனிகுட்டன் கம்பியால் மனைவியை சரமாரியாக தாக்கினார். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த தன்னியா மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்துள்ளார். மனைவி இறந்து விட்டார் என எண்ணிய அனிகுட்டன் வீட்டுக்கு சென்று விட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அக்கம் பக்கத்தினர் பார்த்து ஆறுகாணி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
போலீசார் அவரது உடலை மீட்டனர். இதைதொடர்ந்து மளிகை கடைக்கு சென்ற போலீசார் படுகாயமடைந்து கிடந்த தன்னியாவை மீட்டு கேரள மாநிலம் கட்டாக்கடையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாஜ பிரமுகருடனான கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கம்பியால் தாக்கிவிட்டு, கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜவினர் மிரட்டல்
மனைவியுடன் தகராறு ஏற்பட்டு பிரிந்திருந்த அனிகுட்டன், தன்னியாவின் கடைக்கு எதிரிலேயே மளிகை கடை வைத்துள்ளார். இதையடுத்து பாஜ பிரமுகர் மதுகுமார் தூண்டுதலின் பேரில் மேல்புறம், களியல், குலசேகரம் பகுதிகளை சேர்ந்த பாஜவினர் தன்னியாவுக்கு ஆதரவாக அனிகுட்டன் கடைக்கு சென்று அவரை மிரட்டியதுடன் கடையில் உள்ள பொருட்களை தன்னியாவிடம் கொடுக்கும்படி கூறி உள்ளனர். இதனால் அனிகுட்டன் மனவேதனையில் இருந்துள்ளார்.
The post கள்ளக்காதல் மோகம்; மனைவிக்கு பாஜ பிரமுகர் ‘இச்’; கணவர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.