கோவை மருதமலை அடிவாரத்தில் கடந்த 17-ம் தேதி மயங்கி விழுந்த பெண் யானைக்கு வனக்கால்நடை மருத்துவர்கள் சுகுமார் (கோவை), விஜயராகவன் (முதுமலை புலிகள் காப்பகம்), சதாசிவம் (சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்), கலைவாணன் (ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) மற்றும் முத்துராமலிங்கம் உள்ளிட்ட குழுவினர் தொடர் சிகிச்சை அளித்தனர்.
மயங்கிக் கிடந்த யானையை பொக்லைன் இயந்திரம் மூலம் பெல்ட் பொருத்தி நிற்க வைத்து கும்கி யானைகள் உதவியுடன் சிகிச்சை அளித்தனர். தமிழகத்தில் முதல் முறையாக காட்டு யானைக்கு அதன் காது நரம்பு வழியாக ஐ.வி. மூலம் குளுக்கோஸ் செலுத்தப்பட்டது. சிறப்பு நீர் சிகிச்சை (ஹைட்ரோதெரபி) அளிக்கப்பட்டது. 4 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு அந்த பெண் யானை உயிரிழந்தது. பிரேத பரிசோதனையின் போது வயிற்றில் குட்டி இருப்பதும், யானை சாணத்தில் அரை கிலோ அளவு பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததும் தெரியவந்தது.