சென்னை: காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்பாமல், ஓய்வு பெற்றவர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துவதற்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2021 திமுக தேர்தல் அறிக்கையில், அரசு துறைகளில் 5.50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். ஆனால், உண்மையில் தமிழக அரசு துறைகளில், பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களே ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியமர்த்தப்படுகின்றனர்.
குறிப்பாக, தலைமை செயலகத்திலேயே பணி ஓய்வு பெற்று ஓய்வூதியம் வாங்கிக்கொண்டிருக்கும் பிரிவு அலுவலர்கள், சார்பு, துணை, இணை மற்றும் கூடுதல் செயலாளர்கள் நிலையில் பலர் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறப்பு திட்ட செயலாக்க துறைக்கு, மாதம் 1 லட்சம் தொகுப்பு ஊதியத்தில், தற்காலிக ஆலோசகராக பணிபுரிவதற்கு, தலைமை செயலகத்தில் துணைச் செயலாளர் பதவி நிலைக்கு குறையாத பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் 21.3.2025க்குள் விண்ணப்பிக்க நாளிதழ்களில் விளம்பரம் வந்துள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எப்போது லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கும் என்று, தகுதி வாய்ந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் தவமிருக்கும் நிலையில், அவர்களின் தலையிலும், மற்றும் தற்போது பதவி உயர்விற்காக காத்திருக்கும் நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்களின் தலையிலும் இந்த விளம்பரம் பேரிடியாக விழுந்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் உடனடியாக தேர்வு நடத்தி அரசு துறைகளில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் குறித்த காலத்தில் நிரப்பி, படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்பாமல் ஓய்வுபெற்றவர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துவதா? எடப்பாடி எதிர்ப்பு appeared first on Dinakaran.