சென்னை: தமிழ்நாடு முழுவதும் காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் நவம்பர் மாதத்துக்குள் விரிவாக்கம் செய்யப்படும் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலாத்தலங்களில் காலி மதுபாட்டில்கள் வீசப்படுவதால், வனவிலங்குகள் பாதிக்கப்படுவது தொடர்பான வழக்கில், இயற்கை சூழலுக்கும், வனவிலங்குகளுக்கும் ஏற்படும் பாதிப்பை போக்க, காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை நடை முறைபடுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைதொடர்ந்து டாஸ்மாக் நிர்வாகம் கடந்த 2023-ம் ஆண்டு நீலகிரியில் உள்ள கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்தியது. மேலும் இந்த திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்த நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த திட்டத்தின்படி விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்கள் மீது ரூ.10 கூடுதலாக விற்க வேண்டும். இதையடுத்து வாடிக்கையாளர்கள் காலி பாட்டில்களை திரும்பத் தரும்பட்சத்தில் ரூ.10 அவர்களிடம் திருப்பி கொடுக்க வேண்டும்.