திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த காவலர்கள் இருவர், இளம்பெண் ஒருவரைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. காவல் துறையினர் குற்றச் செயல்களில் ஈடுபட்டால், அவர்கள் மீதான தண்டனை கடுமையாக்கப்படும் என அண்மையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், காவலர்கள் இத்தகைய குற்றத்தில் ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுப் பெண் தன் தாயுடன் காய்கறிகள் ஏற்றப்பட்ட வண்டியில் திருவண்ணாமலை காய்கறிச் சந்தைக்குக் கடந்த வாரம் வந்தார். ஊருக்குத் திரும்பும் வழியில் ஏந்தல் கிராமத்தின் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த திருவண்ணாமலை கிழக்குக் காவல் நிலையத்தைச் சேர்ந்த சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோர், வாகனத்தில் இருந்த இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக இறக்கி, அருகில் இருந்த மறைவான பகுதிக்குக் கொண்டுசென்று பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிவிட்டுத் தப்பியோடினர்.