சென்னை: “காவிரி பாசன மாவட்டங்களில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடப்பாண்டிலும் சம்பா மற்றும் தாளடி பருவ நெல் விளைச்சல் கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. நெற்பயிர் பாதிப்புகளை கணக்கெடுத்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்குவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி பாசன மாவட்டங்களில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடப்பாண்டிலும் சம்பா மற்றும் தாளடி பருவ நெல் விளைச்சல் கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. வழக்கமாக கிடைக்க வேண்டிய மகசூலை விட 60 விழுக்காடு வரை குறைவான மகசூல் மட்டுமே கிடைத்திருக்கும் நிலையில் விவசாயிகளின் துயரைத் துடைக்க தமிழக அரசு இப்போது வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது.