காஷ்மீரின் கதுவா பகுதியில் காணாமல்போன 3 பேர் சடலங்களாக மீட்கப்பட்டு உள்ளனர். மூன்று பேரையும் தீவிரவாதிகள் கொடூரமாக கொலை செய்திருப்பதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.
காஷ்மீரின் ஜம்மு பகுதி கதுவா மாவட்டம், பிலாவர் அருகேயுள்ள சுராக் கிராமத்தைச் சேர்ந்த தர்சன் சிங் (40) யோகேஷ் சிங் (32), வருண் சிங் (15) ஆகியோர் கடந்த 6-ம் தேதி உறவினர் ஒருவரின் திருமணத்துக்காக சென்றனர். டேகோடா கிராமத்தில் நடந்த திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு வனப்பகுதி வழியாக சொந்த ஊரான சுராக் கிராமத்துக்கு அவர்கள் திரும்பினர். ஆனால் 3 பேரும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.