*செய்யாறு சப்-கலெக்டர், ஏடிஎஸ்பி அஞ்சலி
செய்யாறு : காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் வீரமரணம் அடைந்த வெம்பாக்கத்தை சேர்ந்த ராணுவ வீரரின் உடல், அவரது சொந்த கிராமத்தில் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் குளத்து தெருவை சேர்ந்தவர் ஜீவகன், ஓய்வு பெற்ற போலீஸ்காரர். இவரது மகன் வினோத்குமார்(49). காஷ்மீர் பகுதியில் 62வது படைத்தளத்தில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு நர்மதா(45) என்ற மனைவியும், ரஷிதா(18), கீர்த்தனா(15) என்ற 2 மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 18ம்தேதி மாலை 3.49 மணியளவில் காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட சண்டையில் வினோத்குமாரின் வலது தோள்பட்டையில் குண்டு பாய்ந்தது. அங்குள்ள (எஸ்கேஐஎம்எஸ்) மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் (19ம் தேதி) வீரமரணம் அடைந்தார்.
இவரது உடல் காஷ்மீரில் இருந்து தெலங்கானா மாநிலம் ஐதராபாத்துக்கு விமானம் மூலம் நள்ளிரவு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து நேற்று அதிகாலை சொந்த ஊரான வெம்பாக்கத்திற்கு ராணுவ வாகனத்தில் கொண்டு வரப்பட்டது.
அவரது உடலுக்கு செய்யாறு சப்-கலெக்டர் பல்லவிவர்மா, ஏடிஎஸ்பி சிவனுபாண்டி, 62வது ராணுவ பிரிவு தலைமை அலுவலர் ஈஸ்வரசிங், செய்யாறு டிஎஸ்பி சண்முகவேலன், வெம்பாக்கம் தாசில்தார் துளசிராமன், சப்-இன்ஸ்பெக்டர் கோபால்திரிபாதி மற்றும் ஏராளமான கிராம மக்கள் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
வீர மரணம் அடைந்த வினோத்குமாரின் உடலுக்கு உறவினர்கள், நண்பர்கள், கிராம மக்கள் மற்றும் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், அதிமுக மாவட்ட செயலாளர் தூசி மோகன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் பிரமுகர்கள் பலரும் மலர் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
மேலும் வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள் 150 பேர் வீர வணக்கம் செலுத்தினர். இதையடுத்து 11 மணியளவில் ராணுவ வீரர் வினோத்குமாரின் உடலுக்கு 24 குண்டுகள் முழங்க ராணுவ இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் அவரது உடல் மீது போர்த்தப்பட்டிருந்த தேசிய கொடி, கும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடந்து வெம்பாக்கம் தாலுகா அலுவலகம் பின்புறம் உள்ள சுடுகாட்டில் உடல் தகனம் செய்யப்பட்டது. தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தது கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
The post காஷ்மீரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் உடல் 24 குண்டுகள் முழங்க தகனம் appeared first on Dinakaran.