*தொழிலாளர்கள் வலியுறுத்தல்
தொண்டி : தொண்டி சுற்றுவட்டார பகுதிகளில் கிடுகு முடையும் தொழில் தற்போது போதிய வரவேற்பு இன்றி மிகவும் நலிவுற்ற நிலையில் உள்ளது.தென்னை மர கிடுகு தட்டிகள் மனித வாழ்வில் ஒன்றிய ஒன்று. கலாச்சாரத்தின் அங்கமாகவும் இருக்கிறது. கடந்த காலங்களில் ஒரு குடிசையாவது வாழ்வில் கட்டி விடவேண்டும் என ஒவ்வொறு வரும் முடிவு எடுத்திருப்பர்.
இதை ஒரு குடிசை தொழிலாக தோப்பில் தங்கி பல நூறு குடும்பங்கள் வாழ்ந்து வந்தது. கிராமங்கள் மற்றும் நகரங்களில் பெரும்பாலும் அதிகமாக குடிசைகளே காணப்பட்டது. அப்போது இந்த தட்டி முடையும் தொழில் மிகவும் பரபரப்பாக இருந்தது. திருமணத்திற்கு பந்தல் போட, கோவில் திருவிழாவிற்கு பந்தல் போட, இறந்தவர் வீட்டிற்கு பந்தல் போட என வாடகைக்கும் இந்த தொழில் நடைபெற்றது.
சொந்தமாக குடிசைவீடு கட்டுபவர்கள் மொத்தமாக விலைக்கு வாங்கி சென்றனர். ஆனால் கால மாற்றத்தின் காரணமாக கிராமங்கள் முதல் நகரங்கள் வரையிலும் கான்கிரீட் வீடுகள் கட்ட துவங்கியதால் கிடுகு தட்டிகளின் தேவை குறைய துவங்கியது. மாடிகளில் குடில் அமைத்தனர். அதன் பின்னர் அதையும் தவிர்த்து சீட் போட ஆரம்பித்தனர். இதனால் மேலும் தொழில் நலிவுற்றன.
கோயில் திருவிழா, திருமணத்திற்கு என வாடகைக்கு எடுத்தவர்களும் தற்போது நவீன ரகத்திற்கு தகர சீட் மற்றும் சாமியான பந்தலுக்கு மாறி விட்டனர். பல வருடங்களாக இத்தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள் மாற்று தொழிலுக்கு செல்ல வழியில்லாமல், இருக்கும் தொழிலை மேம்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் தற்போது கேள்விக்குறியாக உள்ளது.
தொண்டி தொழிலாளிகள் கூறுகையில், ‘‘கடந்த 20 ஆண்டுக்கு மேலாக தட்டி முடைந்து வருகிறேன். ஆரம்பத்தில் தொழில் நன்றாக இருந்தது. மதுரை, நாகபட்டிணம் உள்ளிட்ட பல பகுதியில் இருந்து கிடுகு லோடு லாரிகளில் வரும்.
அதில் அதிகமாக கழிவு வரும். அதனால் நஷ்டமாக இருந்தாலும் அப்போது ஒன்றும் தெரிவதில்லை. ஆனால் இப்போது முதலுக்கே மோசம் வந்து விடுகிறது. வாழ்க்கை நடத்துவதே கஷ்டமாக உள்ளது. தொழில் நலிவுற்று வருவதால், அரசு எங்களுக்கு வாழ்வாதார நிதி உதவி செய்ய வேண்டும்’’ என்றார்.
The post கிடுகு தொழிலுக்கு நிதியுதவி வேண்டும் appeared first on Dinakaran.