இந்திய ஆட்சி அதிகாரம் டில்லி சுல்தான்கள், நாயக்கர்கள், முகலாயர்கள் என கைமாறிக் கொண்டே இருந்தது. 18-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (1700களில்) ஆற்காடு நவாப் ஆட்சியில், தனக்கு போரில் உதவியதற்காக, அப்போதைய நவாப் முகமது அலி, 1763-ல் கிழக்கிந்திய கம்பெனியிடம் இன்றைய தமிழகப் பகுதியில் வரி வசூல் செய்யும் உரிமையை வழங்கினார். அதைத் தொடர்ந்து, அந்தந்தக் காலகட்டத்தில் இந்தப் பகுதியை ஆண்ட அரசர்களுக்கு வரி செலுத்தப்பட்டது.
மகசூலில் மேரை மற்றும் மானியம் போக, மீதி பங்கு, ‘குடிவாரம்’ என்ற பெயரில் நிலத்தை விளைவித்த குத்தகைதாரருக்கும், ‘மேல்வாரம்’ என்ற பெயரில் நில உரிமையாளருக்கும் வழங்கப்பட்டது. வரி வசூல் செய்வதற்காக, மானிய நிலம் என்று சொல்லப்படும், ஜாகிர் நிலத்தின் அமைப்பை அறிய, தாமஸ் பார்னார்ட் என்ற பொறியாளரை கிழக்கிந்திய கம்பெனி பணித்தது.