அந்தக் காலத்தில் மதுரையில் மதுரா கோட்ஸ் நூற்பாலை, கோவில்பட்டியில் லெட்சுமி நூற்பாலை, லாயல் நூற்பாலை, தூத்துக்குடியில் மதுரா கோட்ஸ் ஆலை, விக்கிரமசிங்கபுரத்தில் நூறாண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த ஆர்.வி.மில்ஸ் ஆகியவை பிரபலமாக இருந்தன. இந்த ஆலைகள் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கின. ஆலைகளைச் சுற்றி இருந்த கிராமங்களும் பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்றன.
ஆலைகளில் ஒலிக்கப்படும் சங்கு ஒலி, சுற்றுவட்டார மக்களுக்கு நேரத்தை கணிக்கும் கடிகாரமாக விளங்கியது. இந்த சங்கு ஒலியைக் குறிப்பிடும்போது, சிறுவயதில், பள்ளிக்கூடப் பருவத்தில் நிகழ்ந்தவைகள் நினைவுக்கு வருகின்றன.