கெலமங்கலம் அருகே அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், பாதுகாப்பற்ற குட்டை நீரை மலைக் கிராம மக்கள் பருகி வருகின்றனர். மேலும், சரிவு நிலையில் உள்ள பள்ளத்தில் இறங்கி தண்ணீர் எடுக்கும்போது, முதியவர்கள், குழந்தைகள் தவறி குட்டையில் விழும் அவலமும் நீடிப்பதாக அக்கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 28 ஊராட்சிகளில் மொத்தம் 283 கிராமங்கள் உள்ளன. இதில், பெரும்பாலான கிராமங்கள் மலைகள் மற்றும் வனத்தையொட்டியுள்ளது. இக்கிராம மக்களுக்குக் கல்வி, மருத்துவம், குடிநீர், சாலை, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்று வரை பூர்த்தியாகாத நிலையுள்ளது. இக்கிராமங்களுக்குச் சாலை வசதியில்லாததால் அதிகாரிகளின் கவனத்தில் வராமல், அரசின் வளர்ச்சித் திட்டங்கள், சலுகைகள் கிடைக்காத நிலையால், இப்பகுதி மக்கள் ஆதிவாசிகள் போல வாழும் நிலையுள்ளது.