அப்போது அவருக்கு முப்பது வயது. திருமணம் முடிந்து சில மாதங்களே ஆகியிருந்தன. வானவியல் துறையில் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வை வெற்றிகரமாக முடித்திருந்தார் கிருஷ்ணசுவாமி கஸ்தூரிரங்கன். வெற்றியில் திளைக்க வேண்டிய கஸ்தூரிரங்கன், இருதலைக் கொள்ளி எறும்பு போல தவித்துக் கொண்டிருந்தார்.
பழம் நழுவி பாலில் விழுந்தது போல, உலகளவில் பெரும் மதிப்புகொண்ட பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர் லூயிஸ் அல்வாரெஸின் ஆய்வகத்தில், அவருக்கு மிகவும் பிடித்த வானவியலில் மேல் ஆய்வு செய்ய அழைப்பு வந்திருந்தது.