தென்மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் இனி தாம்பரம் வரை இயங்காது; கிளாம்பாக்கத்துடன் நிறுத்தப்படும் என்ற அறிவிப்பு போக்குவரத்து துறையால் வெளியிடப்பட்டு, அந்த அறிவிப்பு செயல்வடிவத்திற்கும் வந்துவிட்டது. பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்துடன் நிறுத்தப்படுகிறது. மீறி தாம்பரம் வரும் பேருந்துகளின் ஓட்டுநர், நடத்துநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நல்ல எண்ணத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை இது என்பதில் சந்தேகமில்லை. அதே நேரம், அரசின் அறிவிப்பு பேருந்துகளில் பயணித்து சென்னைக்குள் வரும் பயணிகளுக்கும், சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளுக்கும் எந்த அளவுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.