அகமதாபாத்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி. முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 243 ரன்கள் குவித்தது. கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 42 பந்துகளில், 9 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் விளாசினார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய ஷசாங் சிங் 16 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் விளாசி மிரட்டினார். முன்னதாக தொடக்க வீரரான பிரியன்ஸ் ஆர்யா 23 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் விளாசி ஆட்டமிழந்திருந்தார்.
244 ரன்கள் இலக்குடன் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக தொடக்க வீரரான சாய் சுதர்சன் 41 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் விளாசினார். ஜாஸ் பட்லர் 33 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 54 ரன்களும், ஷெர்பேன் ரூதர்போர்டு 28 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 46 ரன்களும் சேர்த்தனர். கேப்டன் ஷுப்மன் கில் 14 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார்.