கோவை: கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தொடர்ந்து கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொள்ளும் யானை உள்ளிட்ட வன உயிரினங்கள் உயிரிழந்து வருகின்றன. இதைத் தடுக்க தமிழக அரசு, மலையடிவாரத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவுக்கு குப்பை கொட்ட தடை விதிக்க வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் சோமையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்கள், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளன. ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைக் கழிவுகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் கொட்டப்படுகின்றன. இதனால் உணவு தேடி வனத்தை விட்டு வெளியேறும் யானைகள், காட்டுப்பன்றிகள், மான்கள் ஆகியவை குப்பைக் கிடங்கில் கிடக்கும் பொருட்களை உட்கொள்கின்றன.