கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் மண்டபத்திற்கும் இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடிப் பாலம் சுற்றுலா பயணிகளின் வரவேற்பை பெற்றுள்ள இடமாகும். கடலின் அழகை ரசித்தபடியே கண்ணாடி மீது நடந்து செல்வதை சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்புகின்றனர்.
இந்த பாலத்தில் விரிசல் விழுந்துள்ளதாக சமீபத்தில் வெளியான செய்தி, சுற்றுலா பயணிகள் மத்தியில் ஒருவித அச்சத்தையும், பாதுகாப்பு குறித்த கேள்விக்குறியையும் ஏற்படுத்தியது. பாலத்தின் கட்டமைப்பு மேற்பகுதியில் பெயின்ட் அடிக்கும் பணி நடந்தபோது, 7 மீட்டர் உயரத்தில் இருந்து சுத்தியல் தவறி விழுந்ததில் 6வது கண்ணாடியில் லேசான விரிசல் விழுந்துவிட்டது என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் விளக்கம் அளித்தது பொதுமக்கள் மத்தியில் இன்னும் அதிர்ச்சியை உருவாக்கியது. கண்ணாடி இருக்குமிடத்தில் சுத்தியலுக்கு என்ன வேலை? என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்துள்ள நியாயமான கேள்வியாகும்.