சேலம்: சர்வதேச அளவில் நிலவும் போர்ச்சூழல், அமெரிக்காவில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் ஆகியவை காரணமாக, ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதால், சேலத்தில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ஆயிரம் ரூபாய் வரை குறைந்து விற்பனையாகிறது.
தமிழகத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி உள்பட பல்வேறு மாவட்ட விவசாயிகளால் மஞ்சள் விளைவிக்கப்படுகிறது. இதில், தமிழக அளவில் ஈரோடு மற்றும் சேலம் ஆகியவை மஞ்சள் விற்பனையின் முக்கிய மையங்களாக இருக்கின்றன. தமிழகத்தில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மஞ்சள் அறுவடைக் காலமாக இருந்து வருகிறது. இதனால், மஞ்சள் விற்பனை மையங்களுக்கு மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மஞ்சள் அதிக எண்ணிக்கையிலான மூட்டையை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருவர்.