மும்பையில் திவா மற்றும் மும்ப்ரா ரயில் நிலையங்களுக்கிடையே நடந்த விபத்தில் 4 ரயில் பயணிகள் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்ற செய்தி ரயில் பயணிகள் மட்டுமின்றி இதர பொதுமக்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிரெதிரே சென்ற இரண்டு ரயில்களிலும் கட்டுக்கடங்காத பயணிகள் கூட்டம் இருந்துள்ளது. அவர்கள் முதுகில் மாட்டியிருந்த பை ஒன்றுக்கொன்று உரசியதில் பயணிகள் கீழே விழுந்து இந்த அசம்பாவித சம்பவம் நடந்துள்ளது.
மும்பையில் பொதுவாகவே ரயில் பயணிகளின் எண்ணிக்கை மற்ற நகரங்களை விட அதிகம். அலுவலகம் சென்று வருவோருக்கு புறநகர் ரயில்களே பிரதான பொதுப் போக்குவரத்தாக இருந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 61 லட்சம் ரயில் பயணிகள் பயணம் செய்கிறார்கள் என்றால் ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் தினந்தோறும் ஏற்படும் நெருக்கடியை எளிதில் உணர முடியும்.