ஆவடி அருகே கூவம் ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணை பகுதியில் குவியும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் பாயும் முக்கிய ஆறுகளில் ஒன்றான கூவம், ராணிப்பேட்டை மாவட்டம் கேசாவரம் கிராமத்தில் கல்லாற்றின் குறுக்கே உள்ள அணைக்கட்டிலிருந்து உருவாகி, 72 கி.மீ. பயணித்து, சென்னையில் நேப்பியர் பாலம் அருகே வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது.
திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி வட்ட பகுதிகளின் விவசாய நிலங்களின் முக்கிய நீர் ஆதாரமாகவும், அப்பகுதிகளின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. இந்நிலையில், ஆவடி அருகே கூவம் ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணை பகுதியில் குவியும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் தெரிவித்ததாவது: ஆவடி அருகே உள்ள தண்டுரை, அணைக்கட்டுசேரி, சோராஞ்சேரி, கண்ணபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கூவம் ஆற்று பாசனத்தை நம்பி நெல், கத்திரிக்காய், வாழை உள்ளிட்ட பயிர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.