ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா உட்பட பலர் நடித்தபடம், ‘கேம் சேஞ்சர்’. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரித்தார். ஜன.10-ம் தேதி வெளியான இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்தப் படத்தில், குண்டூர் மற்றும் விஜயவாடாவைச் சேர்ந்த 350 பேர் துணை நடிகர்களாகப் பங்கேற்றனர். இணை இயக்குநர் ஸ்வர்கன் சிவா என்பவர் அவர்களுக்குத் தலா ரூ.1,200 தருவதாகக் கூறியிருந்தாராம். ஆனால் படம் வெளியாகி இவ்வளவு நாள் ஆகியும் பேசியபடி பணத்தைக் கொடுக்கவில்லை என்றும் ஸ்வர்கன் சிவா தங்களை ஏமாற்றிவிட்டதாக வும் குண்டூர் போலீஸ் ஸ்டேஷனில் அவர்கள் புகார் அளித்தனர். அதில் தயாரிப்பாளர் தில் ராஜுவும், இயக்குநர் ஷங்கரும் இணைந்து இந்த விவகாரத்தில் தங்களுக்கு உதவ வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.