கோவை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் சயான் இன்று ஆஜரானார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இதையடுத்து போலீசார் இதில் தொடர்புடைய சயான், வாளையார் மனோஜ் உட்பட கேரளாவை சேர்ந்த 10 பேரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக தற்போது சிபிசிஐடி போலீசார் மறுவிசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக, 300க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடந்துள்ளது. இதற்கிடையே இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயானை கடந்த 17ம் தேதி கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
ஆனால் உடல்நிலை சரியில்லாததால் ஆஜராக முடியவில்லை என்றும், 24ம் தேதி (இன்று) ஆஜராவதாகவும் சயான் தரப்பில் அவரது வக்கீல் மூலம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து இன்று காலை கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் சயான் ஆஜரானார். அவரிடம் எஸ்பி மாதவன் மற்றும் ஏஎஸ்பி முருகவேல் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு கோவை சிபிசிஐடி ஆபீசில் சயான் ஆஜர் appeared first on Dinakaran.