*டிஎஸ்பி பேச்சுவார்த்தை
செய்துங்கநல்லூர் : செய்துங்கநல்லூர் அருகே இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக ஒரு பிரிவினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
செய்துங்கநல்லூர் அருகே உள்ள விட்டிலாபுரத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சமுதாயத்தினர் கொடை விழாவில் மற்றொரு சமுதாயத்தினரோடு ஏற்பட்ட பிரச்னை காரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனால் முன்விரோதம் இருந்து வந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழக்கை வாபஸ் பெறக்கோரி எதிர்தரப்பை சேர்ந்த சிலர் அரிவாளை காட்டி மிரட்டிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மற்றொரு பிரிவினர் செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற போது வாங்க மறுத்து வழக்கு பதிவு செய்யவில்லை என தெரிகிறது.
இந்நிலையில் விட்டிலாபுரம் வள்ளுவன் நகரில் நேற்று மக்கள் திரண்டு மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், வழக்கு பதிவு செய்யாத செய்துங்கநல்லூர் போலீசாரை கண்டித்தும் அங்குள்ள கலையரங்கம் முன்பு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி நிரேஷ் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்தால் மட்டுமே கலைந்து செல்வோம் எனக்கூறி போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் பரபரப்பான சூழல் காணப்பட்டது. கைது நடவடிக்கை தாமதமானால் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
The post கோயில் விழா விவகாரத்தில் மோதல் விட்டிலாபுரத்தில் ஒரு பிரிவினர் போராட்டம் appeared first on Dinakaran.