கோவை: கோயம்புத்தூர் அருகே உடல்நலக்குறைவால் உயிரிழந்த யானையின் வயிற்றில் 15 மாத குட்டி மற்றும் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது.
கடந்த மே 17-ம் தேதி பாரதியார் பல்கலைக்கழகத்தின் மேற்குப் பகுதியில் பெண் யானை ஒன்று உடல்நிலை பாதிப்புடன் நின்றிருந்தது. யானையின் அருகே அதன் குட்டி யானையும் நின்றிருந்தது. யானையின் உடல்நிலைப் பாதிப்புக்கு வனத் துறையினர் சிகிச்சை அளித்தனர். மறுநாள் அதே இடத்தில் தாய் யானை மயங்கி விழுந்தது. வனத் துறையினர் அந்த யானைக்கு தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். கிரேன் மூலம் பெல்ட்டால் தூக்கி நிறுத்தப்பட்டு, தற்காலிக தொட்டியில் நீர் நிரப்பி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.