கோவை அவிநாசி சாலையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு கட்டப்பட்ட மேம்பாலம், கடந்த 9-ம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கப்பட்டது. இந்த மேம்பாலத்தில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே வாகனங்கள் செல்ல வேண்டும், மேம்பாலத்தின் இறங்குதளத்தில் 30 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டுமென போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர்.
இதுதொடர்பான எச்சரிக்கை அறிவிப்புப் பலகைகளும் அங்கு வைக்கப்பட்டுள்ளன. இதையும் மீறி வாகன ஓட்டிகள் வேகமாக சென்று வருகின்றனர். கடந்த வாரம் மேம்பாலத்தில் இருந்து அதிவேகமாக வந்த கார், கீழே இறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதியதில், 3 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து மேம்பாலத்தில் 40 இடங்களில் நவீன கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.