கோவை: கோவை மாநகராட்சி வளாகத்தில் செயல்படும் அம்மா மூலிகை உணவகத்தில் தீபாவளி இனிப்புகள் விற்பனை தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு ஸ்பெஷலாக பாலில் செய்த திருப்பதி பாலாஜி லட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு முதல், ‘அம்மா மூலிகை உணவகம்’ செயல்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவிக்குழுவால் செயல்படுத்தப்படும் இந்த உணவகத்தில் காலை நேரத்தில் பல்வேறு வகையான மூலிகை சூப் வகைகள், அதன் தொடர்ச்சியாக கம்பங்கூழ் போன்ற திரவு உணவு வகைகள் விற்பனையாகின்றன.
மதிய நேரத்தில் சாப்பாடு, சைவ பிரியாணி, மாலை நேரத்தில் சுண்டல், மிளகாய் பஜ்ஜி என விதவிதமான உணவு வகைகள் விற்கப்படுகின்றன. மலிவான விலையில் சுவையான உணவுகள் இங்கு கிடைப்பதால், மாநகராட்சி அலுவலக ஊழியர்களில் தொடங்கி பொதுமக்கள் வரை பலரும் இந்த உணவகத்தின் வாடிக்கையாளர்களாக உள்ளனர். அம்மா உணவகத்தில் ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகையின்போது பல்வேறு வகையான இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.