சென்னை: நெல்லையில் முன்னாள் உதவி ஆய்வாளர் கொலை சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதில் அளித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது” என்று உறுதி அளித்துள்ளார்.
சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்: தமிழக சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 19) கேள்வி நேரம் முடிந்ததும், நேரம் இல்லா நேரத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசியதாவது: “திருநெல்வேலி மாநகரில் கடந்த 18-ம் தேதி மசூதியில் அதிகாலை ரமலான் தொழுகை முடித்து வீடு திரும்பி கொண்டிருந்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜாகிர் உசேன் சில நபர்களால் வழிமறித்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே முஸ்லிம் தைக்கா ஒன்றில் முத்தவல்லி நிர்வாகியாக இருந்தவர்.