சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக கீழ்ப்பாக்கத்தில் தொழிலதிபர் அப்துல் காதர் என்பவரின் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் அப்துல் காதர். தொழிலதிபரான இவர், மண்ணடியில் தலைமையிடமாக கொண்டு பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார். இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு வருமான வரித்துறை இவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அதில் சட்டவிரோதமாக பணம் பறிமாற்றம் செய்து இருந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து இந்த வழக்கு அமலாக்கத்துறை விசாரணைக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் பரிந்துரை செய்தனர்.
அதன்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் தொழிலதிபர் அப்துல் காதர் சட்டவிரோதமாக பணம் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்தது தெரியவந்தது. பின்னர் அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழு இன்று காலை 7 மணிக்கு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 3 வது தளத்தில் வசித்து வரும் அப்துல் காதர் மற்றும் அவரது அலுவலகம் அமைந்துள்ள மண்ணடியில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் வழக்கு தொடர்பாக சில முக்கிய ஆவணங்கள் மற்றும் வங்கி பரிவர்த்தனை தொடர்பான தகவல்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இந்த சோதனை முடிந்த பிறகு தான் முழு விபரங்கள் தெரியவரும் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக கீழ்ப்பாக்கத்தில் தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை appeared first on Dinakaran.