ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 40 பந்துகளில் சதம் விளாசினார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அபிஷேக் சர்மா. சதம் விளாசிய கையோடு தன் வசம் இருந்த துண்டு சீட்டை எடுத்து அவர் காண்பித்தார். ‘இது ஆரஞ்சு ஆர்மிக்காக’ என அதில் எழுதப்பட்டு இருந்தது. அதை உடனடியாக வாங்கி படித்தார் பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர். அது சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.
அந்த துண்டு சீட்டை வாங்கிப் படித்ததும் ஸ்ரேயாஸ் முகத்தில் லேசான புன்னகை பூத்தது. அதுதான் நெட்டிசன்களின் கவனம் பெற்றது. 55 பந்துகளில் 141 ரன்கள் விளாசினார் 24 வயதான அபிஷேக். அவரது அதிரடியால் 246 ரன்கள் இலக்கை 18.3 ஓவர்களில் எட்டியது சன்ரைசஸ் ஹைதராபாத். ஆட்டநாயகன் விருதையும் அவர்தான் வென்றார்.