திருமயம்: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வெங்களூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜகபர்அலி(58). சமூக ஆர்வலரான இவர், சட்டவிரோத கனிம வளக்கொள்ளைக்கு எதிராக பல்வேறு கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த மாதம் 17ம் தேதி குவாரி உரிமையாளர்களால் லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக குவாரி உரிமையாளர்கள் ராமையா, ராசு, இவரது மகன் தினேஷ்குமார், லாரி உரிமையாளர் முருகானந்தம், லாரி டிரைவர் காசிநாதன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. குவாரி உரிமையாளர்கள் உட்பட 5 பேருக்கும் நீதிமன்ற காவல் முடிந்த நிலையில் புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் படுத்தப்பட்டனர். சிபிசிஐடி போலீசார், இவர்களை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனு செய்திருந்தனர். இதனையடுத்து 3நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி வழங்கி நீதிபதி பாரதி உத்தரவிட்டார். இதையடுத்து சிபிசிஐடி போலீசார், அவர்கள் 5 பேரையும் பலத்த பாதுகாப்போடு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.
The post சமூக ஆர்வலர் கொலையில் கைதான 5 பேரை 3 நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடிக்கு கோர்ட் அனுமதி appeared first on Dinakaran.