சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க ஒரு வாரமே இருக்கும் நிலையில், சென்னையின் திருமழிசை போலீஸ் ஸ்டேஷனில் பிரபலம் ஒருவர் சரண்டர் செய்த கைத்துப்பாக்கி காணாமல் போகிறது. வாக்காளர்களுக்கு முறை கேடாகப் பணப் பட்டுவாடா செய்ய உள்ளூர் தாதாவான கனகுவிடம் (சுஜித்) கொடுக்கப்பட்ட ரூ.10 கோடியும் காணாமல் போகிறது. ஒருபுறம், மாயமான கைத்துப்பாக்கியை கண்டுபிடிக்கும்படி பணிக்கப்படுகிறார் பயிற்சி எஸ்.ஐ ஆன புகழ் (தர்ஷன்). இன்னொரு பக்கம், கனகுவும் அவர் ஆட்களும் பணத்தைத் தேடுகிறார்கள். இரு தரப்பையும் இணைத்த புள்ளி எது? அவர்களுக்கிடையிலான முட்டலும் மோதலும் எதனால்? துப்பாக்கியும் பணமும் கிடைத்ததா? என்பது கதை.
சட்டத்தைக் காக்கும் போலீஸ்காரர்களும் அதை மதிக்காத நிழலுலகக் குற்றவாளிகளும் விரும்பியோ, விரும்பாமலோ சபிக்கப்பட்ட ஒரு மோதல் களத்தில் உழல்வதுதான் திரைக்கதையின் மையம். இந்த மோதலில் வழிந்தோடும் வன்முறையின் ரத்தத்தை மீறி, அன்பும் நேயமும் அறமும் வென்றதா, இல்லையா என்பதைப் பிடிமானம் மிகுந்த திரைக்கதை எழுத்தின் வழியே, நேர்த்தியான எமோஷனல் த்ரில்லராக கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் கவுதம் கணபதி. அதில் முழுமையான வெற்றியும் பெற்றிருக்கிறார்.