நீரிழிவு நோய் என்று அழைக்கப்படும் சர்க்கரை வியாதிக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் மாத்திரையின் விலை இன்னும் சில நாட்களில் 90 சததவீதம் வரை குறைய உள்ளது. அதாவது ரூ.60-க்கு விற்கப்படும் ஒரு மாத்திரையின் விலை ரூ.6 வரை குறைய உள்ளது. இது, கோடிக்கணக்கான மக்களின் செலவை குறைத்து நிதி அழுத்தத்திலிருந்து விடுபட உதவும் என்பதுடன் நீரிழிவு நோய் பாதித்த அனைவரும் அதனை வாங்கி பயன்படுத்த ஏதுவாக அமையும்.
நீரிழிவு, இதய செயலிழப்பு மற்றும் அவை தொடர்பான கூட்டு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் முக்கிய மருந்தாக எம்பாக்லிப்ளோசின் உள்ளது. இதன் காப்புரிமை ஜெர்மனியைச் சேர்ந்த போஹ்ரிங்கர் இங்கல்ஹெய்ம் நிறுவனத்திடம் இதுவரை இருந்தது. இந்த நிலையில், இந்த மருந்துக்கான அந்நிறுவனத்தின் காப்புரிமை காலம் இன்றுடன் (மார்ச் 11) காலாவதியாக உள்ளது. இதையடுத்து, மலிவு விலையிலான ஜெனரிக் மருந்துகள் இன்னும் சில நாட்களில் சந்தைக்கு வரும் என மருந்து துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.