நியூயார்க்: அமெரிக்காவில் நடந்த சர்வதேச நினைவாற்றல் திறன் போட்டியில் புதுவையில் உள்ள மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர் விஷ்வா ராஜகுமார் சாம்பியன் பட்டம் வென்றார். மெமரி லீக் உலக சாம்பியன்ஷிப் என்பது மிகவும் சவாலான நினைவாற்றல் போட்டிகளில் ஒன்றாகும். பங்கேற்பாளர்கள் எண்கள், படங்கள் மற்றும் சொற்களின் வரிசைகளை விரைவாக மனப்பாடம் செய்து துல்லியமாக நினைவுபடுத்த வேண்டும். இது இணையம் வழியாக நடத்தப்படும் உலக போட்டியாகும்.
இந்த போட்டியில் பங்கேற்ற புதுவை மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர் விஷ்வா ராஜகுமார் 13.50 வினாடிகளில் 80 இலக்கங்களை மனப்பாடம் செய்தும் 8.40 நொடிகளில் 30 படங்களையும் நினைவுபடுத்தி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ராஜ்குமாரின் அற்புதமான செயல்திறன் மெமரி லீக் வலைத்தளத்தில் 5,000 புள்ளிகளுடன் நம்பர் 1 இடத்தை பெற்றுத் தந்துள்ளது. நியூயார்க் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் ,ராஜகுமார் மனப்பாடம் செய்வதற்கான தனது தனித்துவமான நுட்பங்களைப் பகிர்ந்துள்ளார். ‘‘நினைவாற்றலுக்கும் நீர்ச்சத்துக்கும் முக்கியத் தொடர்பு உள்ளது என்றும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மூளையை கூர்மையாக வைத்திருக்க உதவும்’’ என்று கூறினார்.
The post சர்வதேச நினைவாற்றல் திறன் போட்டி புதுவை மாணவருக்கு சாம்பியன் பட்டம் appeared first on Dinakaran.