திருநெல்வேலியில் கவின் செல்வகணேஷ் என்கிற இளைஞரின் உயிரைப் பறித்த சாதி ஆணவக் கொலை தமிழகத்தையே உலுக்கியிருக்கிறது. நம் சமூகம் எதை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்கிற கேள்வியையும் இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை எழுப்பியிருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரலைச் சேர்ந்த கவின் செல்வகணேஷ் (27), பட்டியல் சாதியைச் சேர்ந்தவர். இவரது தந்தை சந்திரசேகர் ஒரு விவசாயி. தாய் தமிழ்ச்செல்வி ஆசிரியை. இவர்களின் மூத்த மகனான கவினும் திருநெல்வேலி கேடிசி நகரைச் சேர்ந்த சித்தா மருத்துவரான சுபாஷிணியும் காதலித்து வந்ததாகவும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சுபாஷிணியின் குடும்பத்தினர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது. சுபாஷிணியின் தந்தை சரவணன், தாய் கிருஷ்ணகுமாரி இருவருமே காவல் துறையில் உதவி ஆய்வாளர்கள்.