சென்னை: சாதி, மதம் இல்லை என்று சான்றிதழ்கள் வழங்கும் வகையில் உரிய அரசாணையை பிறப்பிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனக்கு சாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்குமாறு திருப்பத்தூர் தாசில்தாருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், தனது குழந்தைகளுக்கு சாதி மற்றும் மதத்தின் அடிப்படையிலான இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசின் எந்த சலுகைகளையும் கேட்க போவதில்லை என்று கூறியிருந்தார். இந்த வழக்கு தனி நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, சாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்க தாசில்தார்களுக்கு அதிகாரம் அளித்து எந்த உத்தரவும் இல்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை தள்ளுபடி செய்து தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சந்தோஷ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் எஸ்.என்.சுப்பிரமணி, டி.நிக்சன் ஆஜரானார்கள். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏற்கனவே திருப்பத்தூர், கோவை, அம்பத்தூர் தாசில்தார்கள் சாதி, மதம் இல்லை என்று சான்றிதழ்கள் வழங்கியுள்ளனர். எனவே, மனுதாரருக்கு அது போல் சான்றிதழை ஒரு மாதத்தில் வழங்க வேண்டும்.
சாதிய ரீதியிலான பாரபட்சத்தை தடுக்க வேண்டும் என்று போராடி வரும் நிலையில், சாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் கோரும் மனுதாரரை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது. சாதி மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்க வருவாய் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கி, உரிய அரசாணையை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும். நாட்டில் சாதி, மத பாகுபாடுகள் அதிகம் உள்ளன. அரசியல் சாசனம் சாதிய ரீதியிலான பாகுபாடுகளை தடை செய்துள்ள போதிலும், சமூக வாழ்க்கையில், அரசியலில், கல்வியில், வேலைவாய்ப்பில், சாதி மதம் இன்னும் முக்கியத்துவம் பெற்றுள்ளது என்று கருத்து தெரிவித்தனர்.
The post சாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்கும் வகையில் அரசாணை பிறப்பிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரை appeared first on Dinakaran.