துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-ஐ நடத்திய நாடு பாகிஸ்தான் என்று இப்போது யாராவது சொன்னால்தான் பலருக்கும் தெரியும். ஓஹோ என்பார்கள். ஆனால், ஐசிசியைப் பொறுத்தவரையில் என்ன நடக்கிறது என்பது புரியாத புதிராகவே உள்ளதாக பலரும் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர். இந்திய அணி 3-வது முறையாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றது. ஆனால், பரிசளிப்பு மேடையில் போட்டியை நடத்தும் நாடான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதி ஒருவர் கூட இல்லை என்பது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
ஐசிசி சேர்மன் ஜெய் ஷா, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலர் தேவஜித் சைகியா, நியூஸிலாந்து கிரிக்கெட் வாரிய இயக்குநர் ரோஜர் ட்வூஸ் ஆகியோர் மேடைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுமைர் அகமது துபாயில்தான் இருந்தார், ஆனால் பரிசளிப்பு மேடைக்கு அவரை அழைக்கவில்லை.