இந்த ஆண்டின் முதல் காலாண்டில் சாலை விபத்துகளால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 15 சதவீதம் குறைந்துள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள அறிவிப்பு நல்ல செய்தியாக அமைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் கோவிட் பெருந்தொற்று காலம் தவிர்த்து உள்ள காலகட்டத்திலும் சாலை விபத்து உயிரிழப்புகள் 15 சதவீதம் குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் 4,864 உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு 4,136 ஆக குறைந்துள்ளது, விபத்து மரணங்களின் எண்ணிக்கையை இன்னும் குறைக்க முடியும் என்பதற்கான நல்ல அறிகுறியாகவே அமைந்துள்ளது. அதேபோன்று சென்னை மாநகரிலும் விபத்து மரணங்களின் எண்ணிக்கை 173-ல் இருந்து 149 ஆக, அதாவது 14 சதவீதம்குறைந்துள்ளதாக மாநகர காவல் ஆணையர் அருண் அறிவித்துள்ளார், இது எதிர்காலத்தில் விபத்து மரணங்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க முடியும் என்பதற்கான நம்பிக்கையை விதைத்துள்ளது.