காங்டாக்: சிக்கிமில் நிலச்சரிவில் சிக்கிய மேலும் 28 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
சிக்கிமில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவினால் சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு சுற்றுலாவுக்கு சென்ற 2,000க்கும் மேற்பட்டவர்கள் அங்கு சிக்கினர். கடந்த 1 ம் தேதி சாட்டேனில் உள்ள ராணுவ முகாமில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 3 வீரர்கள் பலியாகினர். 6 வீரர்களை காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
லாச்சென்,லாச்சுங்,சுங்தாங் ஆகிய பகுதிகளில் சிக்கியிருந்த சுற்றுலா பயணிகளை ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் சாலை வழியாகவும், ஹெலிகாப்டர்கள் மூலமாகவும் மீட்டு வருகின்றனர். இந்த நிலையில்,சாட்டேனில் சிக்கியிருந்த 3 சிறுவர்கள் உட்பட 28 பேரை பேரிடர் மீட்பு படையினர் நேற்று மீட்டனர். அவர்களை ஏற்றி வந்த ஹெலிகாப்டர் பாக்யாங் கிரீன்பீல்டு விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post சிக்கிமில் நிலச்சரிவில் சிக்கிய மேலும் 28 பேர் மீட்பு appeared first on Dinakaran.