மதுரை: பதிவு பெற்ற சித்த மருத்துவர்களிடம் பயிற்சி பெற்ற சட்டப்பூர்வ வாரிசுகளை, சித்த மருத்துவர்களாக அங்கீகரிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை செல்லூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் ரங்கராஜன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: சித்த மருத்துவத்தில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற் படுத்தி வரும் கரோனாவுக்கும் சித்த மருத்துவத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் 2 அரசு சித்த மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் பிஎஸ்எம்எஸ் முடித்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. சித்த மருத்துவத்தைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பதிவு பெற்ற சித்த மருத்துவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகள் சித்த மருந்து தயாரிப்பு மற்றும் சிகிச்சை அளிப்பதில் பயிற்சி பெற்றவர்களாக உள்ளனர்.