சென்னை: சினிமா தயாரிப்பாளரிடம் ரூ.25 லட்சம் மோசடி செய்ததாக தன்னை பற்றி புகார் கூறியிருப்பதை இசையமைப்பாளர் சாம் சி.எஸ் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 2020ல் சலீம் அலிகான், ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ என்ற படத்துக்கு இசையமைக்க என்னை ஒப்பந்தம் செய்தார். பல ஆண்டுகளாக தொடர்பில் இல்லாத அவர், திடீரென்று முழு படத்தையும் முடித்ததாக சொல்லி, என்னை இசையமைக்க கேட்டார். காலதாமதமாகும் என்று சொன்னேன். காத்திருப்பதாக சொன்ன அவர், கோவை காவல்நிலையத்தில் என்மீது புகார் அளித்தார். எனது தரப்பில் ஆதாரங்கள் அளிக்கப்பட்டது.
பிறகு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். செயலாளர் எஸ்.கதிரேசன் முன்னிலையிலும், இசையமைப்பாளர் சங்க நிர்வாகிகள் முன்னிலையிலும் பேச்சுவார்த்தை நடந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டு, தயாரிப்பாளரின் நிலையை மனதில் கொண்டு, நிர்வாகிகளின் ஆலோசனைப்படி, ஏற்கனவே இப்படத்துக்கு சில பாடல்களுக்கு நான் இசையமைத்தாலும், நான் வாங்கிய முன்பணத்தை திருப்பி தர முடிவு செய்தேன். அதற்கு யோசித்துவிட்டு பேசுவதாக சொன்ன சலீம் அலிகான், கோயம்பேடு காவல்நிலையத்தில் என்மீது மோசடி புகார் அளித்துள்ளதாக செய்திகள் வெளியானதை அறிந்து இவ்விளக்கத்தை அளிக்கிறேன்.
சிலரது தூண்டுதலால் என்னை பற்றி அவதூறு பரப்பி, என்னிடம் பணம் பறிக்கும் தீய எண்ணத்துடன் அவர் இருக்கிறார். காவல்நிலையத்தில் இருந்து எனக்கு அழைப்பாணை கிடைக்கவில்லை. அவ்வாறு கிடைத்தால், புகாரில் என்னை பற்றி சொல்லப்பட்டதை அறிந்து, எனது விளக்கத்தை காவல்துறைக்கும், ஊடகங்களுக்கும் அளிப்பேன். சமீர் அலிகான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு சாம் சி.எஸ் கூறியுள்ளார்.
The post சினிமா தயாரிப்பாளரிடம் ரூ.25 லட்சம் மோசடி செய்தேனா?.. இசையமைப்பாளர் சாம் சி.எஸ் விளக்கம் appeared first on Dinakaran.