சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன்கள் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகினர். அப்போது நேரில் ஆஜராக விலக்கு அளிக்கக்கோரி பொன்முடி தாக்கல் செய்துள்ள மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.
கடந்த 2006- 11-ம் ஆண்டில் திமுக ஆட்சிக் காலத்தில் உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தபோது, விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக செம்மண் வெட்டி எடுத்ததாகவும், இதன்மூலம் அரசுக்கு ரூ.28 கோடியே 36 லட்சத்து 40,600 இழப்பு ஏற்படுத்தியதாகவும் கூறி லஞ்சஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது. அதன்படி அமைச்சர் பொன்முடி, அவரது மகனும் திமுக முன்னாள் எம்.பி.யுமான கவுதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீதான வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.