சென்னை: தரமான பால் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த பால் உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட 22 பேருக்கு தலா ரூ.25,000 பரிசு தொகையை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார். சென்னை, நந்தனம் ஆவின் இல்லத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் அனைத்து சரக துணைப்பதிவாளர்களின் (பால்வளம்) பணித்திறன் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது.
இதில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது: தமிழ்நாட்டில் பால் உற்பத்தி திறன் அதிகமுள்ள அனைத்து கிராமங்களிலும் தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம்
பால் கொள்முதல் செய்ய முழுவீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 276 புதிய பால் உற்பத்தியாளர் சங்கங்கள் தொடங்கப்பட்டுள்ளது. 141 செயலிழந்த சங்கங்கள் மீள செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. 124 சங்கங்கள் களைத்தலில் இருந்து மீள பால் கொள்முதலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தை தொடர்ந்து, சட்டமன்ற அறிவிப்புகள் 2023-24 அறிவிப்பு செயலாக்கம் செய்யும் வகையில் தரமான பால் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் சிறந்த பால் உற்பத்தியாளர்கள் (4 பேர்), சிறந்த தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர்கள் (12 பேர்) மற்றும் சிறந்த தொகுப்பு பால் குளிர்விப்பு மைய செயலாளர்கள் (6 பேர்) ஆகிய மூன்று வகைகளின் கீழ் 22 பயனாளிகளுக்கு தலா ரூ.25,000 பரிசு தொகையை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.
The post சிறந்த பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.25,000 பரிசு தொகை appeared first on Dinakaran.