கோவை: மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை வனப்பகுதியில் மீட்கப்பட்ட குட்டியை முகாமில் வைத்து பராமரிக்க வனத்துறை முடிவு செய்துள்ளது. மேலும், ட்ரோன் மூலம் தாய் யானையை தேடும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை வனச்சரக பகுதியில் கடந்த 27-ம் தேதி, பிறந்து 10 மாதமே ஆன ஆண் குட்டி யானையை வனத்துறையினர் மீட்டனர். குட்டி யானையை அதன் தாயுடன் சேர்க்க வேண்டி தாய் யானையை வனத்துறையினர் தேடும் பணியை தொடங்கினர். குட்டி யானை கண்டறியப்பட்ட இடம் சத்தியமங்கலம் வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பக அதிகாரிகளும், தாய் யானையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.