வேலையும், சம்பளமும் இல்லாமல் படு சோக்காக சுற்றும் இளைஞர்களை நம்மூரில், ‘என்னப்பா, மன்னார் அண்ட் கம்பெனியில் வேலையா?” என்று கிண்டல் செய்யும் வழக்கமுண்டு. நடிகர் கே.ஏ.தங்கவேலு ‘கல்யாணப் பரிசு’ படத்தில், தனக்கு வேலையில்லை என்றாலும் தான் மன்னார் அண்ட் கம்பெனியின் மேனேஜர் என்று மனைவியிடம் பொய் சொல்லி பந்தா காட்டித் திரிவார். அதிலிருந்துதான், மன்னார் அண்ட் கம்பெனி பகடி பிரபலமானது. அது இன்றும் தொடர்கிறது.
நாம் திரையில் பார்த்த ஒரு காமெடி சீன் நிஜத்தில் இந்த 2025-ல் எங்கோ நடந்து கொண்டிருக்கிறது என்றால் நம்பத் தோன்றுகிறதா?. நம்புங்கள், நிஜமாகவே சீனாவில் இயங்கிக் கொண்டிருக்கின்றன இத்தகைய போலி அலுவலகங்கள். ஆம், நவீன கால மன்னார் அண்ட் கம்பெனிகள்!