சென்னை: தமிழகத்தில் சுயசான்று அடிப்படையில் கட்டிட அனுமதி பெறும் நடைமுறையில், விண்ணப்பிக்க தகுதியானவர், விண்ணப்பிக்கும் முறை, கட்டிடத்தை சுற்றி விடவேண்டிய இடம் தொடர்பான விதிகளை திருத்தி அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக, ஒருங்கிணைந்த கட்டிட விதிகளில் திருத்தம் செய்து வெளியிடப்பட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: ஒருங்கிணைந்த கட்டிட விதிகளில், சுயசான்று குடியிருப்பு கட்டிடம் என்பது 2,500 சதுரஅடி மனை பரப்பில் 3,500 சதுரஅடி வரையில் குடியிருப்பு கட்டிடம் அதாவது, அதிகபட்சம் ஒரு தரைதளம் மற்றும் முதல் தளம் அல்லது, ஒரு தரைகீழ் தளம், இரண்டு தளங்கள் அதிகபட்சம் 10 மீட்டர் உயரத்தில் கட்டப்படும் கட்டிடமாக இருக்க வேண்டும். இந்த கட்டிடம் கட்டவோ, மறு கட்டுமானம் செய்யவோ அனுமதி பெறுவதற்கு, நில உரிமையாளர், நில குத்தகைதாரர் அல்லது பொது அதிகாரம் பெற்றவர் விண்ணப்பிக்க தகுதியானவர்.