வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அருகே, லாரி மீது சுற்றுலா வேன் மோதி கவிழ்ந்த விபத்தில், கரூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் பரிதாபமாக பலியானார்; 18 பேர் காயமடைந்தனர். கரூர் மாவட்டம், குளித்தலை தாலுகாவில் உள்ள நெய்தலூரை சேர்ந்த 22 பேர், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வேனில் சுற்றுலா வந்தனர். இன்று அதிகாலை 5.30 மணியளவில் வத்தலக்குண்டு பைபாஸ் சாலையில், துணை மின்நிலையம் அருகே, வேன் வந்தபோது சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது திடீரென மோதி கவிழ்ந்தது.
இதில் வேனில் இருந்த பரணி (19) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். வேனில் இருந்த 6 பேர் படுகாயமடைந்தனர்; 12 பேர் லேசான காயத்துடன் தப்பினர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வத்தலக்குண்டு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, படுகாயமடைந்த 6 பேரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கும், லேசான காயமடைந்தவர்களை வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். பின்னர், வேனை அகற்றி போக்குவரத்தை சீர்செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சுற்றுலாவுக்கு வந்த இடத்தில் நடந்த இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
The post சுற்றுலா வந்த இடத்தில் சோகம் லாரி மீது வேன் மோதி கவிழ்ந்தது வாலிபர் பலி; 18 பேர் காயம் appeared first on Dinakaran.