சென்னை: ரொமேனியாவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் சூப்பர்பெட் செஸ் கிளாசிக் 2025 பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “இந்திய சதுரங்கத்தின் குறிப்பிடத்தக்க இந்த தருணத்தை தமிழ்நாடே கொண்டாடுகிறது” என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ரொமேனியாவில் நடைபெற்ற பெருமைமிக்க ‘சூப்பர்பெட் செஸ் கிளாசிக் 2025’ போட்டியில் வாகைசூடி, தனது முதல் கிராண்ட் செஸ் டூர் பட்டத்தை வென்றுள்ள ‘நமது சென்னையின் பெருமிதம்’ கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள்.
கிளாசிக்கல் மற்றும் பிளிட்ஸ் சுற்றுகளில் அசாதாரணமான அமைதியையும் உத்திமிகுந்த ஆழத்தையும் அவரது திறமையான ஆட்டம் வெளிப்படுத்தியது. இந்திய சதுரங்கத்தின் குறிப்பிடத்தக்க இந்த தருணத்தை தமிழ்நாடே கொண்டாடுகிறது,” என்று கூறியுள்ளார்.