சென்னையில் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட மகாராஷ்டிர கொள்ளையன் ஜாபர் குலாம் உசேன் இரானியின் சொந்த ஊரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 25-ம் தேதி காலை சென்னையின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து 6 இடங்களில் வழிப்பறி நடைபெற்றது. இந்த கொள்ளையில் ஈடுபட்ட மகாராஷ்டிராவை சேர்ந்த ஜாபர் குலாம் உசேன் இரானி, அவரது கூட்டளிகள் சல்மான் உசேன் இரானி, மிசம்சா மேசம் இரானி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். திருடிய நகைகள், திருட்டுக்கு பயன்படுத்திய பைக்கை மீட்க 3 பேரும் சென்னை தரமணி பகுதிக்கு கடந்த 26-ம் தேதி அதிகாலை அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது பைக்கில் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து போலீஸார் மீது ஜாபர் குலாம் உசேன் இரானி 2 முறை சுட்டார். போலீஸார் தற்காப்புக்கு சுட்டபோது அவர் உயிரிழந்தார். இதன்காரணமாக இரானியின் சொந்த ஊரான மகாராஷ்டிராவின் ஆம்பிவளி பகுதியின் பாட்டீல் நகரில் பதற்றம் எழுந்திருக்கிறது. அந்த பகுதியில் மகாராஷ்டிர போலீஸார் குவிக்கப்பட்டு உள்ளனர்.