சென்னை: கடும் பனிமூட்டம் காரணமாக சென்னையில் 25க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால், பயணிகள் அவதிக்குள்ளாகினர். சென்னை விமான நிலைய பகுதியில் நேற்று அதிகாலை கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் லண்டனில் இருந்து 317 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. இதேபோல், மஸ்கட்டில் இருந்து 252 பயணிகளுடன் சென்னைக்கு வந்த ஓமன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் பெங்களூருக்கும், ஐதராபாத்தில் இருந்து 162 பயணிகளுடன் சென்னைக்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் திருவனந்தபுரத்திற்கும், புனேவில் இருந்து 152 பயணிகளுடன் சென்னைக்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் திருவனந்தபுரத்திற்கும் திருப்பி அனுப்பப்பட்டன. குவைத்தில் இருந்து 148 பயணிகளுடன் சென்னை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சென்னையில் தரையிறங்க முடியாமல் தொடர்ந்து வானில் வட்டமடித்தது. சென்னையில் இருந்து டெல்லி, மதுரை, கோவை, தூத்துக்குடி, விஜயவாடா, அந்தமான், லண்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு புறப்பட வேண்டிய 15 விமானங்கள் பனிமூட்டம் காரணமாக தாமதமாக புறப்பட்டு சென்றன.திடீர் பனிமூட்டம் காரணமாக நேற்று சுமார் 25க்கும் மேற்பட்ட வருகை, புறப்பாடு விமான சேவைகள் பாதிக்கப்பட்டு பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
The post சென்னையில் கடும் பனிமூட்டம் விமான சேவை பாதிப்பு: பயணிகள் அவதி appeared first on Dinakaran.